Wednesday, December 26, 2012

இனி அவன்; இனியவனா? எனது பார்வையில்.


காலம் காலமாக பல்வேறு திரைப்படங்கள் வெளிவருகின்றன. பல அவற்றில் சில வெற்றியும் பெற்று பெருமளவு தொகைகளை சம்பாதித்து விடுகின்றன. திரைக்கதை, நடிகர் என்பன திரைப்படத்தின் வெற்றி தோல்வியில் செல்வாக்குசெலுத்துகின்றன.
அந்த வகையில் கடந்த 21ம் திகதி வெளியிடப்பட்ட திரைப்படம் தான் “இனி அவன்”.
பல்வேறு எதிர்பார்ப்புகள், யாழ்ப்பாணத்தில் படப்பிடிப்புகள் இடம்பெற்றமை, நண்பர்கள் சிலர் அந்த திரைப்படத்தில் இணைந்து நடித்தமை/ பணியாற்றியமை, அத்தோடு திரைக்கதை இவை இத்திரப்படத்தை பார்க்கும் ஆவலை உந்தித்தள்ளின. கால நேரம் கூடாமையாலும் தவிர்க்க முடியாத சில காரணங்களாலும் முதற்காட்சியாக பார்க்க முடியாது போய் விட்டது.
நல்லவேளை முதற்காட்சியாகப் பார்க்கவில்லையே என்று படத்தை பார்த்த பின்பு எண்ணி மகிழ்ந்தேன்.
காலம் காலமாக தமிழர்களின் வரலாறுகள், அவை சார் உண்மைகள் திரிபுபடுத்தப்படுவதும், உண்மைகள் குழிதோண்டிப் புதைக்கப்படுவதும் பெரும்பான்மையினரால் அரங்கேற்றப்பட்டே வருகின்றன. இத் திரைப்படத்திலும் சிறப்பாக திரிவுபடுத்தலையும், உண்மைகளை குழி தோண்டிப்புதைத்திருப்பதிலும் இத்திரைப்படத்தின் இயக்குனரும், கதைக்கு சொந்தக்காரருமான அசோக ஹந்த்கம தானும் பெரும்பான்மையினர் என்பதை நிரூபித்திருக்கின்றார்.
ஒரு சில காட்சிகள் வேண்டுமென்றே புகுத்தப்பட்டிருப்பதோடு நடக்காத பல சம்பவங்கள் நடந்ததாகக் காட்டப்படுவதிலே இயக்குனரின் கற்பனைத் தன்மை களைகட்டியிருக்கின்றது. இக் காட்சிகள் பேரினவாதிகளிற்கு மகிழ்ச்சியினை தருவதற்காகவும், அவர்களின் ஆதரவுகளைப் பெறுவதற்காகவுமே வலிந்து இணைக்கப்பட்டிருப்பதாகவே ஊகிக்கமுடிகின்றது.
காலங்காலமாக தமிழர்களின் வாழ்வையே வைத்து பிளைத்த பல இயக்குனர்களோடு அசோக கந்தகமவும் இணைந்துள்ளார்.
ஆனால் காட்சி அமைப்புகளிலே வடபுலத்தின் பிரதேசங்களிலே உள்ள இடங்களிலே அமைக்கப்பட்டுள்ள விதம் மிகப்பிரமாதமாகவே உள்ளன.
விரல் விட்டு எண்ணக்கூடிய தமிழ் முழு நீளத்திரப்படங்களே வெளியாகியுள்ள இலங்கையில் இந்திய சினிமா என்ற மாயையிலிருந்து விடுபட்டு இப்படத்தினை பொறுத்தளவில் ஒப்பீடு கடந்த பார்வை எம்மவர்களை வளர்க்க உதவும். ஏனெனில் சினிமா தொழில்நுட்பங்களில் பின்தங்கிய நிலையில் இருக்கும் இலங்கையில் இவ்வாறானதொரு முயற்சி நிற்சயம் வரவேற்கப்படவேண்டியவையே.
தமிழர்களின் போராட்டம் திரைப்படம் முழுவதுமே கொச்சைப்படுத்தப் பட்டுள்ளது.
                            
இறுதிப் போரிலே பிரபாகரன் செத்த போது நீ மட்டும் ஏன் தப்பினாய் என்று கதாநாயகனைப்பார்த்து கடைக்காரர் கேட்பதிலும்,
சாரதிப்பயிற்சிகாக கடைக்காரனிடம் 20,000 கேட்கும் போது கப்பமா கேட்கின்றாய் என்பதிலும் வெந்தபுண்ணிலே வேலைப் பாய்ச்சியிருக்கின்றார் இயக்குனர்.
இதன் மூலம் தமிழர்கள் நாட்டுக்காக போராடவில்லை உணர்வுகளுக்கும், உரிமைகளுக்காகவுமே போராடினர் என்கின்ற உண்மை சோற்றிலே புதைக்கப்பட்ட பூசணிக்காய் போலுள்ளதோடு, தவறான தகவல்களைக் பகிரமுற்பட்டிருக்கின்றமை வலியானதே.
படத்தின் பிரதான கதாநாயகனாக மிளிர்கிறது ஒளிப்பதிவு. யாழ்ப்பாணத்தினை காட்டிய விதம் படம் முழுவதிலும் இயற்கையுடன் ஒன்றிப்போகச் செய்கிறது. இதனால் படம் என்ற உணர்வை தாண்டி நிற்பதுடன் மனதையும் கனக்கச்செய்கிறது. .
அத்துடன் ஊசியால் குத்தி இரத்தத்தினால் பொட்டு வைத்து விதவைக்கு வாழ்வளிக்கும் காட்சி என தமிழர்களின் என வீரத்தையும் உணர்வுகளையும் ஒரு சிங்கள இயக்குனராக இருந்தும் அவற்றை கையாண்டுள்ள விதம் வரவேற்கத்தக்கது.
இவன் பாத்திரம் தனது இயல்பான நடிப்பை ஒரளவே வெளிப்படுத்தியுள்ளார். அதேவேளை இவனைப் போன்ற உடற் தோற்றமுள்ள இயக்கதிலிருந்த பொறுப்பாளர்கள் பலர் இறந்துவிட்டனர். அல்லது இன்னும் வெளியில் அறியப்படாது சிறையிலிருக்கின்றனர். அல்லது வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றுவிட்டனர். மேலும் இவனது தோற்றம் தமிழ் ஆணினது தோற்றமாக இல்லை. குறிப்பாக புனர்வாழ்விலிருந்து வந்தவன் போலவும் தோன்றவில்லை. சிறையில் அவன் அனுபவித்த சித்திரைவதைகள் பற்றிய சிறு குறியீட்டு அம்சங்கள் கூட திரைப்படத்தில் இல்லை. அவன் முதல் முதலாக வீட்டுக்கு வருகின்றபோது வழமையாக ஒப்பாரிகளுடன் தான் ஆக்க்குறைந்த்து அழுகையுடன்தான் தாய்மார் வரவேற்பார்கள். தனது காதலியிடம் தானடைந்த வேதனைகளை ஒருபோதும் குறிப்பிடுவதாக காட்டவில்லை. இதற்கெல்லாம் என்ன காரணம்?
 “இனி அவன்” “இனியவன்” என்று இத்திரைப்படத்தின் தலைப்பு இரண்டு அர்த்தங்களைக் கொண்டிருக்கின்றது. பதின்மவயதில் அனைத்தையும் துறந்து விடுதலைப்புலி இயக்கத்துடன் தன்னை இணைத்து, தமிழ் மக்களின் விடுதலைக்காகப் போராடச்சென்ற இளைஞன் ஒருவன், இருபத்தைந்து வருடங்களின் பின்னர், போராட்டம் தோல்வியடைந்த நிலையில் இலங்கை அரசினால் புனர்வாழ்வு கொடுக்கப்பட்டு, மீண்டும் தனது வாழ்வை விட்ட இடத்திலிருந்து ஆரம்பிக்கும் ஆசையுடன் தன் சொந்தக் கிராமம் நோக்கித் திரும்புகின்றான். அவனை முதலில் வரவேற்பதை விடுத்து ஊர் மக்கள் முகம் சுழிப்பதும், சுவரில் அவன் படம் மாலையுடன் தொங்குவதும், மாலையுடன் மாவீர்ரான வீரர்களை நம்புவதும் திருப்பம்.
                               
தாயையும், அவனது மனைவியையும் தவிர யாரும் மறுவாழ்விற்காய் ஏங்கும் அவனது உணர்வைப் புரிந்து கொள்ள  மறுப்பது வலியானதே.
  இயக்குனர் உரையாடல்களைத் தவிர்த்து, குறியீடாய் திரைமொழியை நகர்த்தியமை, இந்தியத்திரைப்பட  ஜனரஞ்சகத் திரைக்கதைக்கு பரிட்சயமாகிப் போன தமிழ்ப் பார்வையாளர்களால் புரிந்து கொள்ள முடியாமல் போயிருக்கலாம்.
தமிழனை வைத்துப் பிழைக்கும் நிலை மாறவேண்டும். சிலவற்றை மறக்க நினைக்கும் மனங்களில் ஆறாத வடுக்களை ஏற்படுத்தும் விதமாக செயற்படுவதை சிலர் கைவிடல் வேண்டும்.
ஆக மொத்தத்தில் இனி அவன் இனியவனா? என்ற வினாவையே தொடுக்கின்றது.....

Monday, December 10, 2012

சிறுபான்மையினரிற்கு மறுக்கப்படும் மனித உரிமைகள்..


உலகலாவிய ரீதியில் இன்றைய தினம் சர்வதேச மனித உரிமைகள் தினம் உணர்வுகளோடு நினைக்கப்படுகின்றது. அதனையொட்டி இப்பதிவை இடுகின்றேன். சிலவேளைகளில் அடுத்த பதிவினை இடாமல் எனது பதிவுகளின் பக்கத்திற்கு  கூட முற்றுப்புள்ளி வைக்கப்படலாம்.              
              
இலங்கையில் அதுவும் குறிப்பாக வட புலத்தை தவிர எல்லோரிற்கு மனித உரிமைகளது தார்ப்பரியம் தெரிந்ததாக அறியமுடியவில்லை. இருப்பவனிற்கு அதன் அருமை புரியாது என்பது போல இல்லாதவனிற்கே அது கூடியளவில் தாக்கங்களை உணர்வுகளை வலுப்படுத்திவிடுவது இயற்கையே.
1948 டிசம்பர் 10ஆம் நாள் ஒன்றுக்கூடிய ஐக்கிய நாடுகளின் பொது சபையினால் அனைத்துலக மனித உரிமைகள் சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டதை பெருமைப்படுத்தும் பொருட்டு இந்நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. ஐக்கிய நாடுகள் சபைக்கு உலகலாவிய ரீதியில் காணப்படும் தன்னார்வ நிறுவனங்களுக்கும் சர்வதேச நாடுகளும் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க 1950ஆம் ஆண்டு முதல் உலக மனித உரிமைகள் நாள் விரும்பியோ விரும்பாமலோ கொண்டாடப்பட்டு வருகிறது.
               
என்னதான் இருந்தாலும் இலங்கை சுதந்திரமடைந்த ஆண்டிலிருந்து சர்வதேச ரீதியில் சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டாலும் இன்றுவரை இரணடம் தரப் பிரஜைகளுக்கு / இரண்டாம் தரமாகப் பார்க்கப்படும் பிரஜைகளுக்கு இவற்றின் 10வீதம் கூட அனுபவிக்க கிடைத்ததா என்பது கேள்விக்குரியதே. இனவாதத்தால் பிரிக்கப்பட்டு சிங்களம் பேசுபவனுக்கு உயர் உரிமைகள் வழங்கப்பட்டு வருவதோடு தமிழ் பேசுபவன் காலடியில் போட்டு மிதிக்கப்பட்டே வருகின்றான் என்பது கண்கூடு.
ஐக்கிய நாடுகள் சபையின் நிகழ்வுகளில் முதன்மையான இந்நாளில், நியூயோர்க்கில் அமைந்துள்ள அதன் தலைமையகத்தில் முக்கிய நிகழ்வுகள் இடம்பெறுவது வழக்கமாகும். இந்நாளில் ஐந்தாண்டுக்கு ஒரு முறை வழங்கப்படும் மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகளின் பரிசு வழங்கப்படும். மேலும் பல அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களும் இந்நாளில் பல முக்கிய நிகழ்வுகளை உலகம் பூராகவும் இடம்பெறுகின்றன.
இதில் முக்கியமாக மகிந்தமானவரிற்கு மனித உரிமைக்கான ஐ.நா வின் நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும் என்று உண்ணாவிரத அமைச்சர் விமல் வேண்டுகோள் விடுத்தமையே இவ்வாண்டின் மிகப்பெரும் நகைச்சுவை.
               

 சில மனித உரிமைகளாக,
 ஒவ்வெரு மனிதனும் உயிர்வாழ்வதற்கான உரிமை,
சுதந்திரமாக ஒன்று கூடுவதற்கான உரிமை,
தான் விரும்பிய பிரதேசத்தில் வசிப்பதற்கான உரிமை ,
தான் விரும்பிய மதத்தை பின்பற்றுவதற்கான உரிமை,
கருத்து சுதந்திரம், கல்வி, மருத்துவம், சுகாதாரம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை அம்சங்கள்
மற்றும் வாழ்வதற்கு அவசியமான உரிமைகள்
அனைத்தையும் மனித உரிமைகள் என குறிப்பிடலாம்.
இவற்றிலே எவற்றோடு நாம் வாழ்கின்றோம் என்று கேட்டால் பதிலும் தொண்டைக்குழியில் அடைத்து விடுகின்றது. சொன்னால் ஒருவன் அடிப்பான்; சொல்லாவிட்டால் மற்றவன் அடிப்பான்.
               
மனிதப் படுகொலைகள், மனித உரிமை மீறல்கள் முதலானவற்றுக்கு எதிராகவே மனித உரிமைகள் பிரகடனம் .நா.வால் கொண்டுவரப்பட்டது. ஆனால், சில நாடுகளில் மனித உரிமைகள் பாதுகாக்கப்பட்டு வருகின்ற போதிலும் மனித உரிமைகள் பெயரளவில் மாத்திரமே நடைமுறையில் உள்ளன. பல நாடுகளில் மிக மோசமாக மனித உரிமைகள் மீறப்பட்டு வருவதை மறுப்பதற்கில்லை.
கடந்த காலங்களில் சிலரது புலம்பெயர் விஜயங்களும் அதற்கு அங்குள்ளவர்கள் காட்டிய எதிர்ப்பும் இதற்கு தக்க சான்றுகள் என்பதோடு அந்தச் சட்டங்களின் மீதான மக்களின் நம்பிக்கைகளையும் வலுப்படுத்துகின்றன.
ஒரு சமூகத்தில் வாழும் மக்களின் ஜனநாயகத்தைப் பாதுகாத்தல், பிரஜைகளின் பொது நலனை விருத்தி செய்தல், சமூக நீதியை நிலைநிறுத்தல் என்பவற்றுக்கு மனித உரிமை என்பது அத்தியாவசியம் மிக்க ஒன்றாக இருக்கின்றது. ஆனால் ஜனநாயக நாடு என்று பெயரளவில் சொல்லிக் கொள்ளும் நாடுகளில் பெரும்பாலும் மனித உரிமைகள் மீறப்பட்டே வருகின்றன என்பதை ஊடகங்கள் வழியாக நாம் அன்றாடம் அறிகின்றோம்.
                  
அண்மையில் கூட இலங்கையில் இறுதிக் கட்டத்தில் ஐக்கிய நாடுகள் சபையானது மக்களை பாதுகாக்க தவறி விட்டதாக ஏற்றுக் கொண்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.எனினும் இன்றைய தினம் சர்வதேச மனித உரிமை நாள் கொண்டாடப்பட்டு வருகின்ற நிலையில் ஆர்ப்பாட்டம் ஒன்று கிளிநொச்சியில் இடம்பெறுகின்றமை இலங்கையில் மனித உரிமைகள் எந்தளவு நிலையிலிருக்கின்றது என்பதை புலம்போட்டுக்காட்டுகின்றது.
               
கண்ணீரோடு எத்தனயோ பேரிடம் முறையிட்டும் எமக்கான நீதி கிடைத்தாகவில்லை. காலமும் கடவுளும் தான் இதற்கு பதிலளிக்க வேண்டிய கடைப்பாடுடையவர்கள்.
சட்டவாக்கத் துறையின் மிக முக்கிய பதவியான பிரதம நீதியரசருக்கெதிராக ஆர்ப்பாட்டம் செய்பவர்களுக்கு சோத்துப் பார்சலும்+கறுப்புப் பணமும், ஆனால் சொந்த உரிமைகள், உணர்வுகளுக்காகப் போராடுபவர்களுக்கு குற்றத் தடுப்பு சிறையும் தடுப்புக்காவலும்.
மனிதனை மனிதன் சரிநிகர் சமனாய் மதிக்கவேண்டும் என்ற பாரதி இன்றிருந்தால் மலைத்திருக்கக் கூடும் எங்களைப் பார்த்து.
இந்த ஜெகத்தில் ஒருவனுக்கு கூட உணவில்லையெனில் உலகையே அழித்திடுவோம் என்றவர் தான் பாரதி. ஆனால் பேரினவாதிகள், சிங்களவரிற்கு நிலமில்லையேல் தமிழரை அழிப்போம் என்கின்றனர்.
எதுவாக இருந்தாலும் நடமுறைக்கால விடயங்கள் பலரை மௌனிகளாக்கியிருக்கின்றது. அதனையும் மீறினால் கடந்த காலம் மீண்டும் உருவாகி வீதியோரங்களில்ம், சந்திகளிலும் இறந்த உடல்கள் கிடக்குமோ என்கின்ற நிலைத்த அச்சம்.
ஆக மொத்ததிலே மனிதர்களுக்கான உரிமைகள் தமிமிழர்களுக்கும் சிறுபான்மையினரிற்கும் இல்லையே.
              

பிரபல்யமான பதிவுகள்