Wednesday, December 26, 2012

இனி அவன்; இனியவனா? எனது பார்வையில்.


காலம் காலமாக பல்வேறு திரைப்படங்கள் வெளிவருகின்றன. பல அவற்றில் சில வெற்றியும் பெற்று பெருமளவு தொகைகளை சம்பாதித்து விடுகின்றன. திரைக்கதை, நடிகர் என்பன திரைப்படத்தின் வெற்றி தோல்வியில் செல்வாக்குசெலுத்துகின்றன.
அந்த வகையில் கடந்த 21ம் திகதி வெளியிடப்பட்ட திரைப்படம் தான் “இனி அவன்”.
பல்வேறு எதிர்பார்ப்புகள், யாழ்ப்பாணத்தில் படப்பிடிப்புகள் இடம்பெற்றமை, நண்பர்கள் சிலர் அந்த திரைப்படத்தில் இணைந்து நடித்தமை/ பணியாற்றியமை, அத்தோடு திரைக்கதை இவை இத்திரப்படத்தை பார்க்கும் ஆவலை உந்தித்தள்ளின. கால நேரம் கூடாமையாலும் தவிர்க்க முடியாத சில காரணங்களாலும் முதற்காட்சியாக பார்க்க முடியாது போய் விட்டது.
நல்லவேளை முதற்காட்சியாகப் பார்க்கவில்லையே என்று படத்தை பார்த்த பின்பு எண்ணி மகிழ்ந்தேன்.
காலம் காலமாக தமிழர்களின் வரலாறுகள், அவை சார் உண்மைகள் திரிபுபடுத்தப்படுவதும், உண்மைகள் குழிதோண்டிப் புதைக்கப்படுவதும் பெரும்பான்மையினரால் அரங்கேற்றப்பட்டே வருகின்றன. இத் திரைப்படத்திலும் சிறப்பாக திரிவுபடுத்தலையும், உண்மைகளை குழி தோண்டிப்புதைத்திருப்பதிலும் இத்திரைப்படத்தின் இயக்குனரும், கதைக்கு சொந்தக்காரருமான அசோக ஹந்த்கம தானும் பெரும்பான்மையினர் என்பதை நிரூபித்திருக்கின்றார்.
ஒரு சில காட்சிகள் வேண்டுமென்றே புகுத்தப்பட்டிருப்பதோடு நடக்காத பல சம்பவங்கள் நடந்ததாகக் காட்டப்படுவதிலே இயக்குனரின் கற்பனைத் தன்மை களைகட்டியிருக்கின்றது. இக் காட்சிகள் பேரினவாதிகளிற்கு மகிழ்ச்சியினை தருவதற்காகவும், அவர்களின் ஆதரவுகளைப் பெறுவதற்காகவுமே வலிந்து இணைக்கப்பட்டிருப்பதாகவே ஊகிக்கமுடிகின்றது.
காலங்காலமாக தமிழர்களின் வாழ்வையே வைத்து பிளைத்த பல இயக்குனர்களோடு அசோக கந்தகமவும் இணைந்துள்ளார்.
ஆனால் காட்சி அமைப்புகளிலே வடபுலத்தின் பிரதேசங்களிலே உள்ள இடங்களிலே அமைக்கப்பட்டுள்ள விதம் மிகப்பிரமாதமாகவே உள்ளன.
விரல் விட்டு எண்ணக்கூடிய தமிழ் முழு நீளத்திரப்படங்களே வெளியாகியுள்ள இலங்கையில் இந்திய சினிமா என்ற மாயையிலிருந்து விடுபட்டு இப்படத்தினை பொறுத்தளவில் ஒப்பீடு கடந்த பார்வை எம்மவர்களை வளர்க்க உதவும். ஏனெனில் சினிமா தொழில்நுட்பங்களில் பின்தங்கிய நிலையில் இருக்கும் இலங்கையில் இவ்வாறானதொரு முயற்சி நிற்சயம் வரவேற்கப்படவேண்டியவையே.
தமிழர்களின் போராட்டம் திரைப்படம் முழுவதுமே கொச்சைப்படுத்தப் பட்டுள்ளது.
                            
இறுதிப் போரிலே பிரபாகரன் செத்த போது நீ மட்டும் ஏன் தப்பினாய் என்று கதாநாயகனைப்பார்த்து கடைக்காரர் கேட்பதிலும்,
சாரதிப்பயிற்சிகாக கடைக்காரனிடம் 20,000 கேட்கும் போது கப்பமா கேட்கின்றாய் என்பதிலும் வெந்தபுண்ணிலே வேலைப் பாய்ச்சியிருக்கின்றார் இயக்குனர்.
இதன் மூலம் தமிழர்கள் நாட்டுக்காக போராடவில்லை உணர்வுகளுக்கும், உரிமைகளுக்காகவுமே போராடினர் என்கின்ற உண்மை சோற்றிலே புதைக்கப்பட்ட பூசணிக்காய் போலுள்ளதோடு, தவறான தகவல்களைக் பகிரமுற்பட்டிருக்கின்றமை வலியானதே.
படத்தின் பிரதான கதாநாயகனாக மிளிர்கிறது ஒளிப்பதிவு. யாழ்ப்பாணத்தினை காட்டிய விதம் படம் முழுவதிலும் இயற்கையுடன் ஒன்றிப்போகச் செய்கிறது. இதனால் படம் என்ற உணர்வை தாண்டி நிற்பதுடன் மனதையும் கனக்கச்செய்கிறது. .
அத்துடன் ஊசியால் குத்தி இரத்தத்தினால் பொட்டு வைத்து விதவைக்கு வாழ்வளிக்கும் காட்சி என தமிழர்களின் என வீரத்தையும் உணர்வுகளையும் ஒரு சிங்கள இயக்குனராக இருந்தும் அவற்றை கையாண்டுள்ள விதம் வரவேற்கத்தக்கது.
இவன் பாத்திரம் தனது இயல்பான நடிப்பை ஒரளவே வெளிப்படுத்தியுள்ளார். அதேவேளை இவனைப் போன்ற உடற் தோற்றமுள்ள இயக்கதிலிருந்த பொறுப்பாளர்கள் பலர் இறந்துவிட்டனர். அல்லது இன்னும் வெளியில் அறியப்படாது சிறையிலிருக்கின்றனர். அல்லது வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றுவிட்டனர். மேலும் இவனது தோற்றம் தமிழ் ஆணினது தோற்றமாக இல்லை. குறிப்பாக புனர்வாழ்விலிருந்து வந்தவன் போலவும் தோன்றவில்லை. சிறையில் அவன் அனுபவித்த சித்திரைவதைகள் பற்றிய சிறு குறியீட்டு அம்சங்கள் கூட திரைப்படத்தில் இல்லை. அவன் முதல் முதலாக வீட்டுக்கு வருகின்றபோது வழமையாக ஒப்பாரிகளுடன் தான் ஆக்க்குறைந்த்து அழுகையுடன்தான் தாய்மார் வரவேற்பார்கள். தனது காதலியிடம் தானடைந்த வேதனைகளை ஒருபோதும் குறிப்பிடுவதாக காட்டவில்லை. இதற்கெல்லாம் என்ன காரணம்?
 “இனி அவன்” “இனியவன்” என்று இத்திரைப்படத்தின் தலைப்பு இரண்டு அர்த்தங்களைக் கொண்டிருக்கின்றது. பதின்மவயதில் அனைத்தையும் துறந்து விடுதலைப்புலி இயக்கத்துடன் தன்னை இணைத்து, தமிழ் மக்களின் விடுதலைக்காகப் போராடச்சென்ற இளைஞன் ஒருவன், இருபத்தைந்து வருடங்களின் பின்னர், போராட்டம் தோல்வியடைந்த நிலையில் இலங்கை அரசினால் புனர்வாழ்வு கொடுக்கப்பட்டு, மீண்டும் தனது வாழ்வை விட்ட இடத்திலிருந்து ஆரம்பிக்கும் ஆசையுடன் தன் சொந்தக் கிராமம் நோக்கித் திரும்புகின்றான். அவனை முதலில் வரவேற்பதை விடுத்து ஊர் மக்கள் முகம் சுழிப்பதும், சுவரில் அவன் படம் மாலையுடன் தொங்குவதும், மாலையுடன் மாவீர்ரான வீரர்களை நம்புவதும் திருப்பம்.
                               
தாயையும், அவனது மனைவியையும் தவிர யாரும் மறுவாழ்விற்காய் ஏங்கும் அவனது உணர்வைப் புரிந்து கொள்ள  மறுப்பது வலியானதே.
  இயக்குனர் உரையாடல்களைத் தவிர்த்து, குறியீடாய் திரைமொழியை நகர்த்தியமை, இந்தியத்திரைப்பட  ஜனரஞ்சகத் திரைக்கதைக்கு பரிட்சயமாகிப் போன தமிழ்ப் பார்வையாளர்களால் புரிந்து கொள்ள முடியாமல் போயிருக்கலாம்.
தமிழனை வைத்துப் பிழைக்கும் நிலை மாறவேண்டும். சிலவற்றை மறக்க நினைக்கும் மனங்களில் ஆறாத வடுக்களை ஏற்படுத்தும் விதமாக செயற்படுவதை சிலர் கைவிடல் வேண்டும்.
ஆக மொத்தத்தில் இனி அவன் இனியவனா? என்ற வினாவையே தொடுக்கின்றது.....

Monday, December 10, 2012

சிறுபான்மையினரிற்கு மறுக்கப்படும் மனித உரிமைகள்..


உலகலாவிய ரீதியில் இன்றைய தினம் சர்வதேச மனித உரிமைகள் தினம் உணர்வுகளோடு நினைக்கப்படுகின்றது. அதனையொட்டி இப்பதிவை இடுகின்றேன். சிலவேளைகளில் அடுத்த பதிவினை இடாமல் எனது பதிவுகளின் பக்கத்திற்கு  கூட முற்றுப்புள்ளி வைக்கப்படலாம்.              
              
இலங்கையில் அதுவும் குறிப்பாக வட புலத்தை தவிர எல்லோரிற்கு மனித உரிமைகளது தார்ப்பரியம் தெரிந்ததாக அறியமுடியவில்லை. இருப்பவனிற்கு அதன் அருமை புரியாது என்பது போல இல்லாதவனிற்கே அது கூடியளவில் தாக்கங்களை உணர்வுகளை வலுப்படுத்திவிடுவது இயற்கையே.
1948 டிசம்பர் 10ஆம் நாள் ஒன்றுக்கூடிய ஐக்கிய நாடுகளின் பொது சபையினால் அனைத்துலக மனித உரிமைகள் சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டதை பெருமைப்படுத்தும் பொருட்டு இந்நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. ஐக்கிய நாடுகள் சபைக்கு உலகலாவிய ரீதியில் காணப்படும் தன்னார்வ நிறுவனங்களுக்கும் சர்வதேச நாடுகளும் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க 1950ஆம் ஆண்டு முதல் உலக மனித உரிமைகள் நாள் விரும்பியோ விரும்பாமலோ கொண்டாடப்பட்டு வருகிறது.
               
என்னதான் இருந்தாலும் இலங்கை சுதந்திரமடைந்த ஆண்டிலிருந்து சர்வதேச ரீதியில் சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டாலும் இன்றுவரை இரணடம் தரப் பிரஜைகளுக்கு / இரண்டாம் தரமாகப் பார்க்கப்படும் பிரஜைகளுக்கு இவற்றின் 10வீதம் கூட அனுபவிக்க கிடைத்ததா என்பது கேள்விக்குரியதே. இனவாதத்தால் பிரிக்கப்பட்டு சிங்களம் பேசுபவனுக்கு உயர் உரிமைகள் வழங்கப்பட்டு வருவதோடு தமிழ் பேசுபவன் காலடியில் போட்டு மிதிக்கப்பட்டே வருகின்றான் என்பது கண்கூடு.
ஐக்கிய நாடுகள் சபையின் நிகழ்வுகளில் முதன்மையான இந்நாளில், நியூயோர்க்கில் அமைந்துள்ள அதன் தலைமையகத்தில் முக்கிய நிகழ்வுகள் இடம்பெறுவது வழக்கமாகும். இந்நாளில் ஐந்தாண்டுக்கு ஒரு முறை வழங்கப்படும் மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகளின் பரிசு வழங்கப்படும். மேலும் பல அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களும் இந்நாளில் பல முக்கிய நிகழ்வுகளை உலகம் பூராகவும் இடம்பெறுகின்றன.
இதில் முக்கியமாக மகிந்தமானவரிற்கு மனித உரிமைக்கான ஐ.நா வின் நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும் என்று உண்ணாவிரத அமைச்சர் விமல் வேண்டுகோள் விடுத்தமையே இவ்வாண்டின் மிகப்பெரும் நகைச்சுவை.
               

 சில மனித உரிமைகளாக,
 ஒவ்வெரு மனிதனும் உயிர்வாழ்வதற்கான உரிமை,
சுதந்திரமாக ஒன்று கூடுவதற்கான உரிமை,
தான் விரும்பிய பிரதேசத்தில் வசிப்பதற்கான உரிமை ,
தான் விரும்பிய மதத்தை பின்பற்றுவதற்கான உரிமை,
கருத்து சுதந்திரம், கல்வி, மருத்துவம், சுகாதாரம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை அம்சங்கள்
மற்றும் வாழ்வதற்கு அவசியமான உரிமைகள்
அனைத்தையும் மனித உரிமைகள் என குறிப்பிடலாம்.
இவற்றிலே எவற்றோடு நாம் வாழ்கின்றோம் என்று கேட்டால் பதிலும் தொண்டைக்குழியில் அடைத்து விடுகின்றது. சொன்னால் ஒருவன் அடிப்பான்; சொல்லாவிட்டால் மற்றவன் அடிப்பான்.
               
மனிதப் படுகொலைகள், மனித உரிமை மீறல்கள் முதலானவற்றுக்கு எதிராகவே மனித உரிமைகள் பிரகடனம் .நா.வால் கொண்டுவரப்பட்டது. ஆனால், சில நாடுகளில் மனித உரிமைகள் பாதுகாக்கப்பட்டு வருகின்ற போதிலும் மனித உரிமைகள் பெயரளவில் மாத்திரமே நடைமுறையில் உள்ளன. பல நாடுகளில் மிக மோசமாக மனித உரிமைகள் மீறப்பட்டு வருவதை மறுப்பதற்கில்லை.
கடந்த காலங்களில் சிலரது புலம்பெயர் விஜயங்களும் அதற்கு அங்குள்ளவர்கள் காட்டிய எதிர்ப்பும் இதற்கு தக்க சான்றுகள் என்பதோடு அந்தச் சட்டங்களின் மீதான மக்களின் நம்பிக்கைகளையும் வலுப்படுத்துகின்றன.
ஒரு சமூகத்தில் வாழும் மக்களின் ஜனநாயகத்தைப் பாதுகாத்தல், பிரஜைகளின் பொது நலனை விருத்தி செய்தல், சமூக நீதியை நிலைநிறுத்தல் என்பவற்றுக்கு மனித உரிமை என்பது அத்தியாவசியம் மிக்க ஒன்றாக இருக்கின்றது. ஆனால் ஜனநாயக நாடு என்று பெயரளவில் சொல்லிக் கொள்ளும் நாடுகளில் பெரும்பாலும் மனித உரிமைகள் மீறப்பட்டே வருகின்றன என்பதை ஊடகங்கள் வழியாக நாம் அன்றாடம் அறிகின்றோம்.
                  
அண்மையில் கூட இலங்கையில் இறுதிக் கட்டத்தில் ஐக்கிய நாடுகள் சபையானது மக்களை பாதுகாக்க தவறி விட்டதாக ஏற்றுக் கொண்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.எனினும் இன்றைய தினம் சர்வதேச மனித உரிமை நாள் கொண்டாடப்பட்டு வருகின்ற நிலையில் ஆர்ப்பாட்டம் ஒன்று கிளிநொச்சியில் இடம்பெறுகின்றமை இலங்கையில் மனித உரிமைகள் எந்தளவு நிலையிலிருக்கின்றது என்பதை புலம்போட்டுக்காட்டுகின்றது.
               
கண்ணீரோடு எத்தனயோ பேரிடம் முறையிட்டும் எமக்கான நீதி கிடைத்தாகவில்லை. காலமும் கடவுளும் தான் இதற்கு பதிலளிக்க வேண்டிய கடைப்பாடுடையவர்கள்.
சட்டவாக்கத் துறையின் மிக முக்கிய பதவியான பிரதம நீதியரசருக்கெதிராக ஆர்ப்பாட்டம் செய்பவர்களுக்கு சோத்துப் பார்சலும்+கறுப்புப் பணமும், ஆனால் சொந்த உரிமைகள், உணர்வுகளுக்காகப் போராடுபவர்களுக்கு குற்றத் தடுப்பு சிறையும் தடுப்புக்காவலும்.
மனிதனை மனிதன் சரிநிகர் சமனாய் மதிக்கவேண்டும் என்ற பாரதி இன்றிருந்தால் மலைத்திருக்கக் கூடும் எங்களைப் பார்த்து.
இந்த ஜெகத்தில் ஒருவனுக்கு கூட உணவில்லையெனில் உலகையே அழித்திடுவோம் என்றவர் தான் பாரதி. ஆனால் பேரினவாதிகள், சிங்களவரிற்கு நிலமில்லையேல் தமிழரை அழிப்போம் என்கின்றனர்.
எதுவாக இருந்தாலும் நடமுறைக்கால விடயங்கள் பலரை மௌனிகளாக்கியிருக்கின்றது. அதனையும் மீறினால் கடந்த காலம் மீண்டும் உருவாகி வீதியோரங்களில்ம், சந்திகளிலும் இறந்த உடல்கள் கிடக்குமோ என்கின்ற நிலைத்த அச்சம்.
ஆக மொத்ததிலே மனிதர்களுக்கான உரிமைகள் தமிமிழர்களுக்கும் சிறுபான்மையினரிற்கும் இல்லையே.
              

Sunday, November 18, 2012

வேங்கை மண்ணில் குருளைகள்.


கடந்த வாரம் இடவேண்டிய பதிவு நேரமின்மை காரணமாக இன்றே நிறைவேற்றப்படுகின்றது. முல்லைத்தீவு பின்பு யாழ்ப்பாணம், கொழும்பு மீண்டும் முல்லைத்தீவு என்று மாறி மாறி சென்றதன் பிற்பாடு கிடைத்திருக்கும் சொற்ப நேரத்தில் இந்தப் பதிவை இடுகின்றேன்.
சொந்தப் புகழிற்கோ அல்லாது நாங்கள் செய்ததை தம்பட்டம் அடிப்பதற்காகவோ இதை இடவில்லை. நாம் என்ன செய்கின்றோம் என்னும் வினாவை எழுப்புபவர்களிற்கும், இன்னொரு இரண்டு வருடங்களிற்குப் பின் நாம் கடந்த காலத்தில் என்ன செய்தோம் என்று பார்ப்பதற்குமேற்ற ஒரு ஆவணமாக இதை இடுகையிடுகின்றேன்.
               
தமிழன் வந்தோரை வரவேற்கும் இனம், அப்படி இப்படியெல்லாம் பெருமைப் பட்ட இனம். சொந்தக் காட்டிக்கொடுப்புகளாலும் பதவி ஆசைகளாலும் சிக்கி சின்னாபின்னப்பட்டு நடுத்தெருவிலே வந்து நிற்கின்றது. யாழ்ப்பாணத்தானிற்கு ஒன்றென்றால் வன்னியர் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாட்டார். உடனடியாக உயிரையும் தந்து உதவி செய்வர். அதே போலத் தான் ஏனைய பிரதேசத் தமிழர்களும். வடக்கு உணவு பஞ்சத்திலே போராடிய போது கொழும்புத் தமிழர்கள் செய்த உதவிகள் அவ்வளவு எளிதில் மறக்கப்பட முடியாதது. அப்படியாக இருக்கையில் முள்ளிவாய்க்கால் பேரவலத்திற்கு பாதிக்கப் பட்டவர்களிற்கு உதவ முடியவில்லையே என்று தவித்தவர்கள் பலர்.
அதன் பின்பு சொந்த இனமே சொந்த இனத்தை அடிக்க, மாற்றினம் தலையிலேறி இருந்து அடிக்க, இயற்கையும் சின்னாபின்னப் படுத்த துவண்டு போனவர்கள் எம்மவர்களே.
               
காலம் பார்த்து காத்திருந்தவர்களிற்கு யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் மழையாலும் பாதிக்கப்பட்டிருக்கின்றனர் என்னும் பேரிடி கலந்த செய்தி கிடைத்தது. உடனே மாறி மாறி அழைப்புகள் பறந்தன. வலி.தென் மேற்கு பிரதேச இளைஞர் கழக சம்மேளனமா, இல்லாவிட்டால் மானிப்பாய் பரிஷ் லியோக் கழகமா இந்த நற்கைங்கரியத்தை மேற்கொள்வது என்பதில் போட்டியின்றி மானிப்பாய் பரிஷ் லியோக் கழகம் இந்தப் பொறுப்பை கையிலெடுத்தது. விரைவாக செயற்படத் தொடங்கினர். பாடசாலைகள், வர்த்தக நிறுவனங்கள், தொண்டர் அமைப்புகளிற்கு நேரிலும் கடிதமுமாக தகவல்கள் பரிமாற்றப்பட்டு செயற்பாடுகள் மேலும் விரிவுபடுத்தப்பட்டன.
               
சென்ற பாடசாலைகளிளெல்லாம் மிகப்பெரும் வரவேற்பு; தம்பி இது காலத்தின் தேவை, எங்கடையாக்கள் இதைத்தானே செய்யோணும், அவை செய்யாட்டிலும் நீங்கள் செய்யுறியள்; ரொம்ப சந்தோசம். இதை ஒரு பாடசாலை அதிபர் சொன்னார்.
மாணவர்கள் கூட தங்களாலியன்ற உதவிகள் செய்தார்கள். ஆசிரியர்கள் தங்களாலியன்ற உதவிகளை மனப்பூர்வமாகச் செய்தார்கள். வர்த்தக நிறுவனங்கள் தங்களது அன்றைய நாளின் வருமானத்திலே பொருட்களை தந்தார்கள். ஆரம்பத்திலே செயற்படத் தொடங்கிய உறுப்பினர் எண்ணிக்கை இறுதிக் கட்டத்தை அடைகின்ற போது அதிகரிக்க தொடங்கியது. எங்களை எங்களாலே நம்ப முடியவில்லை. இவ்வளவு பொருட்களை நாம் சேகரித்தோமா என்பது இன்று வரை நம்ப முடியாததாகி விட்டதே.
               
பதவியேற்று முதலாவது செயற்திட்டத்திலே சுபா சிறப்பாய் செயற்பட்டிருக்கின்றார். அவரோடு முதலாம் உப தலைவரும் வலி.தென்.மேற்கு பிரதேச சபை தவிசாளருமான ஜெபநேசன் அண்ணா, சுஜி, ருக்கேஷ் இவர்கள் தான் ஆரம்பத்திலே முன்வந்து செயற்பட்டவர்கள். பெண்கள் கூட தாம் சளைத்தவர்கள் என்றில்லாது தமது கட்டுப்பாட்டிற்கேற்றா வகையிலே ஒத்துழைத்தனர்.
பெரதெனியாவில் இருந்து முன்னாள் தலைவர் செந்தில் அண்ணா கூட தன் ஆலோசனைகளை இடையிடையே பகிர்ந்தார்.
செயற்திட்டத்தின் இறுதிக் கட்டத்தை நெருங்குகையில் இணைந்து கொண்ட கஜிதாப், கஜன், தர்சிகன், மயூ தங்களது பங்களிப்புகளையும் சிறப்பாக வழங்கினர்.
பொருட்களெல்லாம் சேர்த்தாயிற்று. எவ்வாறு பொதி செய்வது, எவ்வாறு முல்லைத்தீவிற்கு கொண்டு செல்வது என எண்ணத் தொடங்கையிலே சிக்கல் ஆரம்பமாகியது. வாகனத்திற்காக தெரிந்த அறிந்த எல்லோரிடமும் கேட்டோம் அவர்கள் சொன்ன தொகை எமது சக்திக்கப்பாற்பட்டதாகவே இருந்தது.
               
கைக்கெட்டியது வாய்க்கெட்டுமா என்று கையாலாகத நிலை. ஒவ்வொரு நொடிகளும் கடக்க கடக்க விறுவிறுப்பும் பயமும் அதிகமாயிற்று. பாதிக்கப்பட்ட மக்களிற்காக சேகரித்த பொருட்களை உரிய காலத்திலே உரிய முறையில் வழங்கவேண்டும். எல்லோருமாக மண்டையை போட்டு பிய்த்து கொண்டிருக்கையில் கஜிதாப் தான் வாகன வசதிகளை ஒழுங்கு செய்வதாக சொன்ன போது அப்படியே அமைதி. சொன்ன மாரியே செய்து தானே வாகனத்தையும் செலுத்தி முக்கிய தருணத்தில் சாதித்துக் காட்டிய கஜிதாப்பிற்கு சபாஷ்.
பல்வேறு குத்துவெட்டுகளிற்குப் பின் மூல்லைத்தீவு அரச அதிபரிடம் தொடர்பு கொண்டோம். அவர் எங்களைச் செவிமடுத்து நல்லதொரு வரவேற்பைத் தந்தார். முல்லைத்தீவு ஆனந்த புரம் பகுதியை எமக்காக ஒழுங்குபடுத்தினார்.
பயண ஏற்பாடுகள் எல்லாம் பூர்த்தி. இன்னும் பொதியிடல் ஆரம்பிக்கப்படவில்லை. நாளை விடிந்தால் பயணம் ஆரம்பம். ஆனால் தற்போது மாலை 2.30மணி இருக்கும். 450 குடும்பங்களிற்கான பொதிகள் தேவை. இவ்வாறான வேளையில் இணைந்தவர் தான் கானு. எதுக்கென்றாலும் தாமதமாகத் தான் வருவான். லேட்டா வந்தாலும் ரொம்ப லேட்டஸ்ட் ஆனவர். கானு, மயூ, தர்ஷி, கஜன், சுஜி, ருக்கேஷ், சுபா, தர்சன் இவர்களோடு மகளிர் படையும் அற்புதமாக பணியாற்றினர். எல்லாம் பொதி செய்து முடிக்கையில் நள்ளிரவைத் தாண்டி விடிந்துகொண்டிருந்தது.
இடையிடையிலே கிடைத்த சுபாவின் கறிபணிஸூம், அனோச்சி வீட்டிலிருந்து கிடைத்த கேக்கும், அம்மாவிடமிருந்து கிடைத்த கோப்பியும் எல்லோர் களைப்பையும் இல்லாமல் ஆக்கி உற்சாகம் தந்துகொண்டிருந்தது.
எல்லாம் சரி பொழுது விடிந்து கொண்டது. சில மணி நேரத்தூக்கத்தோடும் மிகப் பலமான எதிர்பார்ப்போடும் ஆரம்பித்த பயணம் கழகத்தின் ஆலோசகர் சாந்தன் சேரின் இணைவோடு வலுப்பெற்றது.
               
பொதிகளை வைக்கவே இடமில்லாததால் ஆசனத்திலிருக்கும் ஒருவரது மடியிலே இருவர் மூவர் என்று அமர்ந்துகொண்டனர். முல்லை மக்களை சந்திக்கும் ஆவலில் இந்தத் துன்பங்களெல்லாம் மறைந்தே போயின. ஒருவாறாக புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்கும் சென்றாயிற்று. பிரதேச செயலரின் அன்பான வரவேற்பும், பிரதான கிராம சேவகரின் பேச்சும் எம்மை வசப்படுத்த ஆனந்த புரத்திற்கான பயணம ஆரம்பமாயிற்று.
ஆனந்தபுரம் அ.த.க அபாடசாலைக்கு அருகிலுள்ள கிராமசேவகர் அலுவலகம் இல்லை இல்லை நான்கு தகரங்கள் போடப்பட்ட கூரை மட்டுமே. அங்கு பதிவுகள் இடம்பெற்றுக்கொண்டிருந்தன.
               
கூட்டத்திருந்து புறப்பட்ட தேனிகள் போல லியோக்கள் அனைவரும் அருகிலிருந்த பாடசாலைக்கு சென்று அதிபரின் அனுமதியோடு மாணவர்களோடு இணைந்து கொண்டோம். முதலிலே அவர்களுக்கு ”ஐஸ்” வைப்பதற்காக பிஸ்கட், இனிப்பு எல்லாம் கொடுத்தாயிற்று.   
அடுத்து அவர்களோடு பேசி உளநலன்களை அறிந்து கொண்டோம். மறு புறத்திலே ஏனைய லியோக்கள் பொதிகளை பிரித்துக்கொண்டிருந்தனர். சிலர் ஆசிரியர்களாக மாறி மாணவர்களின் சந்தேகங்களிற்கு விடை தந்தனர். இன்னும் சிலர் அப்பிரதேசத்தைச் சுற்றி யுத்ததின் தடங்களை, தடயங்களை தேடிச் சென்றனர்.
பதிவும் முடிய இடைவேளை மணியும் ஒலித்தது. எனவே மக்களிற்கு உதவிப்பொருட்கள் வழங்கும் குழுவோடு நாமும் இணைந்து கொண்டோம்.
ஜெபா அண்ணா கழகம் பற்றியும் செயற்திட்டம் பற்றியும் விளக்கிக் கூற மக்களிற்கான உதவிப்பொருட்கள் வழங்கப்பட்டன.
               
சின்ன ஆர்வக்கோளாறினால் நானும் இன்னும் சிலரும் மீண்டும் வகுப்பறைகளில் சரணடந்தோம். நேரம் போவதே தெரியாது ஓடிக்கொண்டிருக்க மறு புறத்திலே ஆடை விநயோகமும் இடம்பெற்றது.
               
ஒருவாறு பாடசாலை மணி ஒலிக்க ஓய்விற்கு வந்தோம். மதிய உணவை அருந்துவதற்கு முன் சிறுவர்கள் எங்களை அழைத்துச் சென்று கிளிச்சொண்டு மாங்காய் தந்தனர். மாங்காயை விட அச் சிறுவர்களின் உணர்வு ரசிக்கத்தக்கதாய் இருந்தது.
மதிய உணவின் பிற்பாடு போர் நூதனசாலை, பறா-3 கப்பல், தலைவரின் வீடு இவற்றை பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. ஆயுதங்களின் தொழில்நுட்பம் உண்மையிலே வியப்பைத்தந்தது.
எரிந்து குற்றுயிராய் கிடக்கும் வாகனங்களின் இயந்திரங்கள் கழற்றப்பட்டு தென்னிலங்கைக்கு ஏற்றப்பட்டு முண்டம் போல் கிடந்தன. எஞ்சிய இரும்புகளும் சீருடையினரால் வாகனங்களில் ஏற்றப்பட்டுக் கொண்டிருந்தன. சில இடங்களில் இது ”ரானுவத்தின் சோத்து” இவ்வாறு இருந்தது. அடிக்கொரு புத்தர் சிலை. மக்கள் வீட்டில் மின்சாரம் இருக்கின்றதோ இல்லையோ புத்தரிற்கு மட்டும் பகலிலும் விளக்குகள் ஒளிர்ந்தன.
               
ஒருபுறம் மிகப்பெரும் சுமைய இறக்கிய உணர்வோடும் மறு புறம் எதையோ இழந்த உணர்வோடும் யாழ் நோக்கி ஓடிய வண்டியோடு ஓடிக்கொண்டிருந்தது என் உணர்வுகளும்; மீண்டும் நாம் தலை தூக்க முடியாதா என்று……
*தகவல்களுக்கு ஏற்ற படங்கள் இல்லமைக்கு மன்னிக்கவும். நான் புகைப்படம் எடுப்பதில் கவனம் செலுத்தவில்லை.
மேலதிக புகைப்படங்களிற்கு இந்த இணைப்பை அழுத்துங்கள்.



Monday, November 5, 2012

சபிக்கப்பட்டவர்களா தமிழர்கள்?- ii


சமகால நிலமைகளை அடிப்படையாகக் கொண்டு சபிக்கப்பட்டவர்களா தமிழர்கள்-பாகம் 2 என்னும் பதிவை எழுதவேண்டியாகிவிட்டது.
“தமிழர்களை இறைவனைத் தவிர யாராலும் காப்பாற்ற முடியாது” என்ற மறைந்த தந்தை.செல்வாவின் வாக்கினை மெய்மைப்படுத்தும் முகமாக செயற்படத் தொடங்கியிருக்கின்றனர் எம்மவர்கள். வந்தோரை வரவேற்பது, விருந்தோம்பல், பண்பாடு, கலாசாரம் என்று அனைத்திலும் முன்னிலையில் திகழ்ந்த நாம் எல்லாவற்றையும் படிப்படியாக இழந்து கொண்டிருக்கின்றோம் என்பது கண்கூடு.
அடுத்தவனையும், மாற்றானையும் குற்றம் சுமத்துவதில் அர்த்தமேதுமில்லை.
எம்முடைய நடத்தைகளாலும் குணங்களாலும் நாம் இழந்து கொண்டிருப்பவை ஏராளம். அண்மையிலே ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட முல்லை வாழ் சொந்தங்களிற்கு தமிழர்களை விட ஏனைய இனத்தவர்கள் அதிகமாக உதவியிருக்கின்றனர். நாங்கள் முகப்புத்தகத்திலே தமிழீழம் பேசி வீராப்புக் காட்டுவதிலும் புலம்பெயர் பிரதேசங்களிலிருந்து அர்த்தமற்ற செயற்பாடுகளிலுமே ஈடுபட்டு இலங்கை வாழ் சொந்தங்களிற்கு தொல்லைகளையும் கொடுப்பதை வழக்கப்படுத்திக் கொண்டு விட்டோம். யாருமே நிஜ வீரர்களாகச் செயற்படத் தயாரில்லையே.
              
முல்லையிலே உதவிப்பொருட்களை வழங்கச் சென்ற போது சிங்களவர்களின் உதவிப் பொருட்கள் அடங்கிய 8 லொறிகள் அங்கே இருந்தன. இவையெல்லாம் சிங்கள மக்களால் தமிழர்களுக்காக சேகரிக்கப்பட்டு அனுப்பப்பட்ட பொருட்களே தவிர அரசினாலேயோ ஏனையவர்களினாலேயோ அனுப்பப்பட்டதல்ல. புத்தம் புதிய உடுபுடவைகள் மடிப்புக்குலையாமல் இருந்தன, பெட்டி பெட்டிகளாக குழந்தைகளுக்கான பால்மா. உலர் உண்வுப் பொருட்கள்; பிஸ்கட் உட்பட.
இவையெல்லாவற்றையும் தாண்டி மக்களிடம் கேட்டபோது விரல்விட்டு எண்ணக்கூடிய உதவிகளே தமிழர்களால் வழங்கப்பட்டமை புரிந்தது. சிங்களவர்களை இன்னும் ஏற்றுக்கொள்ள நாம் தயாரில்லை என்றாலும் அவர்கள் எமக்கான உதவிகளை வழங்க முன்வந்திருக்கின்றனர். தமிழர்கள் மொத்தமாக செய்த உதவிகளை விட அவர்கள் செய்த உதவிகள் பல மடங்கு அதிகம்.
               
சிங்களவர் எங்களையும் மனிதர்களாகப் பார்க்கின்றனர்; நாம் அவர்களை “சிங்களவனாகவே” பார்க்கின்றோம். நான் சிங்களவனுக்கு சார்பாகவோ தமிழனுக்கு எதிராகவோ பேசவில்லை. எங்களுடையவர்களுக்கு எதுமென்றால் முதலிலே நாம் தானே தோள் கொடுக்கவேண்டும். ஆனால் நாம் சுயநலத்தாலும் பொறாமையாலும் ஆளப்பட்டுக் கொண்டிருப்பதால் மீளப்போவதுமில்லை; மீளவும் முடியாது.
அண்மையிலே பஸ்ஸிலே பயணிக்கும் போது இன்னொரு சுவாரஸ்யமான சம்பவம். பஸ்ஸிலே அளவுக்கதிகமாக நகை நட்டோடு பெண்ணிருவர். அவர்கள் இறங்கும் இடம் கிட்ட வந்த போது நடத்துனரிடம் பணம் கொடுத்தனர். அப்போ நடத்துனர் நீங்கள் பயணித்த செலவு அதிகம்;இன்னும் 10 ரூபா தரவேண்டும் என்றார். அவர்களுடைய பதில் பணமில்லை.
நியாயம் என்ன? பயணம் செய்த தூரத்துக்கு பணம் தரவேண்டும், இல்லையா? என்னுள்ளே ஆதங்கம், அவர்கள் போட்டிருந்த நகை ஒன்றப்பறித்து விற்று நடத்துனரிடம் பணத்தை வழங்க வேண்டுமென்று. ஆனால் காலமும் இடமும் சம்மதிக்காதல்லவா?
தமிழனுடைய உழைப்பையே தமிழன் சுரண்டும் போது நாம் அடுத்தவனை குற்றம் சுமத்த முடியுமா.
              
அடுத்து தம்மையெல்லாம் தமிழர்களின் த(லை)லமைகள் என்று கூறிக்கொள்ளும் எல்லாம் சேர்ந்தால் எமக்கு விடுவு அல்லாவிட்டால் தீர்வு கிடைத்து விடுமல்லவா. இது எனக்கு மட்டுமல்ல அவர்களுக்கும் தெரியும். ஆனால் அதனைச் செய்ய அவர்கள தயாரில்லை. ஏனேனில் தீர்வு கிடைத்துவிட்டால் அவர்கள் வாழ்க்கை அஸ்தமனமாகி விடுமே? இவர்கள் இருக்கும் வரை காலம் காலமாக இழுபட்டு தமிழர் பிரச்சனை நூற்றாண்டு ஒன்றக்கடந்தாலும் எமக்கு விடுதலை இலகுவில் கிடைத்துவிடாது.
எம்முடையவனை தட்டிக்கொடுக்க எம்மவர்கள் தயாரில்லை, அதனாலே வீழ்கின்றோம். அடுத்தவன் வீட்டு அடுப்பெரிந்தால் மற்ற வீட்டுக் காரனுக்கு வயித்தெரிச்சல். இப்படியாக இருக்கும் போது நாம் எங்கே விடுதலை பெறுவது. பெற்று விட்டாலும் அதை யார் அனுபவிப்பது. இப்படியான சிக்கல்கள் எம்மை சூழ்ந்து கொண்டிருக்கின்றது. சிந்திக்க வேண்டும். தமிழன் தமிழனாக வாழ தலைவிதியை தீர்மானிக்க நாம் ஒட்டுமொத்தமாக நல்ல முறையிலான மாற்றத்தை எதிர்பார்ப்போம்.
மற்ற இனத்தவர்களுக்குள்ளும் வேறுபாடுகள், ஏற்றத்தாழ்வுகள் இல்லாமல் இல்லை. அளவோடு இருக்கின்றது. வேற்றுமைகள், பிரச்சனைகளிற்கு அப்பாலே ஒற்றுமை இருக்கின்றது.
நாளை விடியும் பொழுது நமக்காகவேண்டுமானால் நம்மை நாமே மாற்றிக்கொள்வோம்.

பிரபல்யமான பதிவுகள்